கண்டநாள் முதலாய்!
கண்டநாள் முதலாய்! உனக்கே தெரியாமல் உன்னை தொடரும்போது எனக்கே தெரியாமல் - என் உயிர் இறங்கி உன்னுடன் நடக்கும்! எதேச்சையாய் செய்வதுபோல் என்னை எதிர்பார்த்து திரும்புவாயே! அந்த நொடி பரவசத்துக்கே அரை ஆயுள் தொலைப்பேனடி! நிலவு தொட்டு மல்லி வரை உவமை தேடி தொடுத்தாலும் உன் அழகுக்கென்றும் பொருந்தியதே இல்லை! மருதாணி விரலெல்லாம் சிவப்பு என்ன சிவப்பு? வயதுவந்த முதல்நாள் என்னைக் கண்டு சிவந்தாயே! அதைவிடவா சிவப்பு? வார்த்தை கொண்டா பேசிச் சென்றாய்?! பார்வையில் அன்றோ வருடிச் சென்றாய்! அன்பின் தோள் ஏறி அழகே உனை அடைந்தேன்! ஆசை தமிழ் கொண்டு அணங்கே உனை வரைந்தேன்! உருகிடும் உன் அன்பை பனி போர்த்தி காத்திடவா? மருகிடும் உனை நானும் எனை போர்த்தி காத்திடவா?! இதயக் குழாயிக் கிடையே இணைப் பொன்று மாறியதோ! என் இதயக்கை பற்றி - உன் நினைவு என்மேல் ஏறியதோ?! இனி என்றும் உயிருள் கிறங்கி கிடப்பாயே! உணர்வுள் இறங்கி நடப்பாயே! -அ.ச.கி.