தேனூர் கருவேலமரம்
தேனூர் கருவேலமரம்
முதலாம்
இராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டும், சாடவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து
கல்வெட்டும், சங்க இலக்கியங்களும் தேனூரை பற்றிய சிறப்பை பதிவு செய்வதாக
தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் யாரும் தேடிக் கண்டெடுக்காமல்
சுயம்புவாகவே வெளிவந்த கண்டுபிடிப்பு ஒன்று உண்டு. தேனூரில் 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையில், கருவேலமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. தூருக்கு அடியிலிருந்து ஒரு மண்முட்டி மேலெழுந்து வர, அதை அங்கிருந்த சிறுவர்கள் எடுத்து விளையாடத் துவங்கினர். அதனுள்ளே விரலளவு உள்ள ஏழு கட்டிகள் இருப்பது தெரியவந்தது. அவை ஏழும் தங்கக்கட்டிகள், மொத்தம் சுமார் 700கிராம் எடை கொண்ட தங்கக்கட்டிகள்.
ஏழு தங்கக்கட்டிகளிலும் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஏழிலும் ஒரே பெயர் தான் பொறிக்கப்பட்டிருக்கிறது, அதுவும் ஒரு பெண்ணின் பெயர் - ‘கோதை’. இந்த தங்கக்கட்டிகள் கி.மு. முதல் நூற்றாண்டை சேர்ந்தது என்று தொல்பொருள்துறை கூறுகிறது.
இந்தியாவிலேயே பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் தங்கக்கட்டிகள் இங்கு தான் முதலில் கிடைத்திருக்கிறது. 2100 ஆண்டுகளுக்கு முன் தங்கத்தால் செய்யப்பட்ட கடவுள்சிலைகள் கூட கிடைக்கவில்லை, குறைந்தபட்சம் கடவுளின் பெயர்கள் எழுதிய தங்கம் கூட கிடைக்கவில்லை.
உருவ வழிபாடு துவங்காத காலம் அது. அதனால் கிடைக்கவில்லை, இனி கிடைக்கவும் வாய்ப்பில்லை. ஆனால் காதல் அப்படி இல்லை. அன்பு காலவரையறை இல்லாமல் எல்லா காலத்திலும் விரவிக்கிடக்கிறது. அதற்கான ஒற்றைச் சான்று தான் இது. ஒரு காதலன் தன் காதலிக்கு அளித்த பரிசு போல் தான் தெரிகிறது.
இந்நிகழ்வு உணர்த்தும் அடுத்த ஒரு கருத்து. அன்றே இங்கு தங்கம் போன்ற உலோகங்களை உருக்கும் தொழில்நுட்பமும், அணிகலன் செய்யும் ரசவாதக் கலைகளும் அறிந்திருக்கிறார்கள் என்பது தான்.
அந்துவன் பற்றிய கட்டுரையில் குறிப்பிட்ட கோதை என்கிற பெண் இவள் தான்! இன்னும் இன்னும் நிறைய அந்துவன்களும் கோதைகளும் வரலாற்றின் பக்கங்களில் பொதிந்து கிடக்கிறார்கள். தேடுவோம்!
-அ.ச.கி.
Comments
Post a Comment