அனிதாக்களின் தேசம்!
அனிதாக்களின் தேசம்!
குட்ட குட்ட
குனிவது எங்கள்
குணமென்று கொண்டீரோ?!
திட்ட திட்ட
தீர்வது எங்கள்
இனமென்று கொண்டீரோ?!
முட்ட முட்ட
மூழ்குவது எங்கள்
இயல்பென்று கொண்டீரோ?!
வெட்ட வெட்ட
சாவது எங்கள்
இயல்பென்று கொண்டீரோ?!
குட்ட குட்ட
கூடுவோம்!
திட்ட திட்ட
திமிர்வோம்!
முட்ட முட்ட
முறைப்போம்!
வெட்ட வெட்ட
வளர்வோம்!
நெஞ்சம் நிமிர்ந்து நின்றால்
கொஞ்சம் திமிர்ந்து நின்றால்
ஊர் தாளுமா?!
பார் வாழுமா?!
புனிதத்தின் பெயரைச் சொல்லி
மனிதத்தை கொன்றொழித்தார்!
ஒற்றைத்தேசம் என்றே சொல்லி
வேற்றுமையை தூண்டிவிட்டார்!
தரமென்று சொல்லிச் சொல்லி
நீதியை தூக்கிலிட்டார்!
அனிதாக்களின் தேசமிது
எத்துணை பெருமையிது?
இனியொரு முறை
நிகழ்ந்திடவா பொறுப்போம்?
நிகழும் சூழலை
வேரோடு அறுப்போம்!!
எங்கும் தமிழ் இனமுண்டு
அதற்கு தனியே குணமுண்டு!
அமிழ்தம் அவனது மொழிதான்!
ஆனால்
அன்பே வழியாய் கொள்ளாதே!
அறத்தை வழியாய் கொள் தமிழா! - எதிரி
சிரத்தை ஒழித்து கொல் தமிழா!
அறச்சீற்றம் கொண்டு நில் தமிழா!
யுகமாற்றம் வேண்டும் வெல் தமிழா!
-அ.ச.கி
கரு. பழனியப்பன் சொல்லியது போன்று 'ஒன்றாய் இருக்க சம்மதம். ஆனால் ஒரேமாதிரி அல்ல!'
நிச்சயம் ஒரேமாதிரி அல்ல!!!
Comments
Post a Comment